Archives: பிப்ரவரி 2024

அதிர்ஷ்டம்மல்ல, ஆனால் கிறிஸ்து

இப்பிரபஞ்சத்தில் சுமார் 700 குயிண்டிலியன் (7 மற்றும் 20 பூஜ்ஜியங்கள்) கிரகங்கள் உள்ளதாக டிஸ்கவர் என்ற இதழ் கூறுகிறது. ஆனால் பூமியைப் போன்ற கிரகம் வேறில்லை. வானியற்பியல் ஆராய்ச்சியாளர் எரிக் ஜாக்ரிசன், ஒரு கிரகத்தில் உயிரினம் வாழத் தேவையானது சரியான வெப்பநிலை மற்றும் நீா் வளம். அது "அதிர்ஷ்டவசமான" மண்டலத்தில் சுற்றிவரும் கிரகத்தில்தான் இவ்வாறு அமையும் எனக் கூறுகிறார். 700 குயின்டிலியன் கோள்களில், பூமியில் மட்டுமே உயிரிகள் வாழத் தகுதியாக உள்ளது எனத் தெரிகிறது. ஜாக்ரிசன் முடிவாகக் கூறும்போது, எப்படியோ பூமி்க்கு "மிகவும் அதிர்ஷ்டம்" அடித்துள்ளது என்கிறார்.

அதிர்ஷ்ட தேவதையால்  இந்தப் பிரபஞ்சம் தோன்றவில்லை, மாறாக இயேசுவின் கிரியையே காரணம் என்று பவுல் கொலோசெய சபைக்கு தீர்க்கமாக கூறியுள்ளார். அப்போஸ்தலன், கிறிஸ்துவை உலகின் சிருஷ்டிகராக முன்னிறுத்துகிறார்; "ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது" (கொலோ 1:16). இயேசு இந்த உலகத்தைப் படைத்த வல்லமையுள்ள சிருஷ்டிகர் மட்டுமல்ல, "எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது" (வ.17) என பவுல் சொல்கிறார். அதிக வெப்பமாயும், மிகவும் குளிராகவும் இல்லாமல், மனிதன் வாழ்வதற்கேற்ற ஒரு சீதோஷ்ண நிலையைக் கொண்டுள்ளது. தான் படைத்ததை, தமது பூரண ஞானத்தாலும் எல்லையில்லா வல்லமையாலும் இயேசு நிலைநிறுத்துகிறார்.

தேவனின் படைப்பின் அழகில் நாமும் பங்குடையவர்களாய் அதை அனுபவிக்கும்போது, அதிர்ஷ்ட தேவதையின் கிரியையே இது என்று எண்ணாமல், "சகல பரிபூரணமும் வாசமாயிருக்கும்" (வ.19) நோக்கமுள்ள, இறையாண்மையுள்ள, வல்லமையுள்ள அன்பானவரையே எண்ணுவோம்..

கூடியிருப்பது நலம்

ஒரு புகைப்படக் கலைஞர் ஸ்டார்லிங்ஸ் பறவைகளையும் (கருப்பு நிற சிறிய பறவை), ஆயிரக்கணக்கான இந்தப் பறவைக் கூட்டம் வானத்தில் நிகழ்த்தும் பிரமிப்பூட்டும் "மர்மரிங்ஸ்" எனப்படும் தண்ணீர்போன்ற அசைவுகளையும் படம்பிடிக்கப் பல ஆண்டுகள் செலவிட்டார். இதை விண்ணில் பார்ப்பது ஒரு அலையின் அடியில் அமர்ந்திருப்பது போன்றது அல்லது பற்பல வடிவங்களில், கலைஞர்கள் தூரிகையினால் வரையும் கண்கவர் கண்ணாடி ஓவியம் போன்று உள்ளது. டென்மார்க்கில், இந்த ஸ்டார்லிங் பறவைகளின் அனுபவத்தை பிளாக் சன் என்பார்கள். மிகவும் வியப்பூட்டுவது, இந்த பறவைகள் தங்களுடைய இயற்கையான உள்ளுணர்வால் நெருக்கமாக அருகருகே பறப்பதுதான்; ஒரு பறவை கூட நகர்வில் தவறினால், அவைகள் குழப்பமடைந்து, மொத்த கூட்டமும் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்கவே "மர்மரிங்ஸ்" முறை. ஒரு பருந்து அவைகளில் ஒன்றை இரையாக்க இறங்கும்போது, வேட்டையிலிருந்து தப்பிக்க இந்த சிறிய பறவைகள் நெருக்கமான அமைப்பில் கூட்டாக நகர்கின்றன. அவை தனியாக இருந்தால் அவற்றை எளிதாகப் பருந்து வேட்டையாடிவிடும்.

நாம் தனியாக இருப்பதை விட ஒன்றாக இருப்பது நல்லது. "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்" என்று பிரசங்கி கூறுகிறார். " ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்;" (பிரசங்கி 4:9-11). நாம் தனிமைப்படுத்தப்பட்டால் எளிதாகப் பலியாகிவிடுவோம். மற்றவர்களின் ஆறுதலோ, பாதுகாப்போ இல்லாமல் பலவீனமடைவோம்.

ஆனால் கூடிவாழும்போது நண்பர்கள் மூலம் உதவிகிடைக்கிறது, நாமும் உதவுகிறோம். "ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது" (வ12) என்று பிரசங்கி கூறுகிறார். தேவன் நம்மை வழிநடத்திட,  நாம் கூடியிருப்பதே நலம்.

அந்நியரை உபசரித்தல்

"எவ்ரிதிங் சாட் இஸ் அன்ட்ரூ" என்ற புத்தகத்தில், டேனியல் நயேரி தனது தாய் மற்றும் சகோதரியுடன் சித்திரவதையிலிருந்து தப்பிக்க, ஒரு அகதி முகாம் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பான இடத்திற்கு ஒடி வந்த கொடூரமான பயணத்தை விவரிக்கிறார். அவர்களுக்கு நிதி உதவிசெய்ய, முன்பின் தெரியாத ஒரு வயதான தம்பதியினர் முன்வந்தனா். பல ஆண்டுகள் கழிந்தும், டேனியல் அதைக் கிரகிக்கக் கூடாமல்,  "உங்களால் நம்ப முடிகிறதா? கண்மூடித்தனமாக அதைச் செய்தனர். நாங்கள் சந்தித்ததே இல்லை. நாங்கள் தீயவர்களாக இருந்திருந்தால், அதற்கான விலைக்கிரயத்தை அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். என் வாழ்வில் அதுபோன்ற துணிச்சல், இரக்கம் மற்றும் தீவிரத்தைக் கண்டதேயில்லை" என்று எழுதுகிறார்.

இப்படிப்பட்ட கரிசனையைப் பிறர் மீது நாம் காட்டும்படி தேவன் விரும்புகிறார். அந்நியரிடம் இரக்கமாயிருக்கும்படி, இஸ்ரவேலரிடம் தேவன் கூறினார். "நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே" (லேவியராகமம் 19:34). இயேசுவுக்குள்ளான புறஜாதி விசுவாசிகளுக்கு (நம்மில் பெரும்பாலானோர்) "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், … புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 2:12) என்று நினைவூட்டினார். ஆகவே, யூதரும் புறஜாதியுமான முன்பு அந்நியராயிருந்த நம் அனைவர்க்கும், "அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்" (எபிரெயர் 13:2) என அவர் கட்டளையிடுகிறார்.

இப்போது தனக்கென ஒரு குடும்பத்துடன் வளர்ந்துள்ள டேனியல், தங்களுக்கு உதவிய ஜிம் மற்றும் ஜீன் டாவ்சனை, "அவ்வளவு கிறிஸ்தவ தன்மையோடு இருந்தனர், அகதிகளின் குடும்பத்தை தங்களுக்கு வீடு கிடைக்கும் வரை தங்களோடு வாழ அனுமதித்தனர்" பாராட்டுகிறார்.

தேவன் அந்நியரை ஏற்றுக்கொள்கிறார், அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு நம்மையும் தூண்டுகிறார்.

தேவனுடைய கிரியைகளை பற்றிய கதைகள்

1999 ஏப்ரல், ஒரு கோடைக்கால இரவில், ரேச்சல் பர்னபாஸ் தனது 9 மற்றும் 8 வயதுடைய ஆண் பிள்ளைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். இவரது கணவர் தொழில் விஷயமாக வெளியூர் சென்றுள்ளதால், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று இரவு அவள் மாடியிலிருந்த படுக்கையறைக்கு ஏறியபோது, ஜன்னலில் ஒரு கருப்பு பிம்பத்தைக் கண்டதாக அவள் நினைத்தாள், ஆனால் பின்னர் கூர்ந்து கவனித்ததில், அது அவளுடைய இரவு உடையின் பிரதிபலிப்பைத் தவிர வேறில்லை என்பதை அவள் உணர்ந்தாள். ரேச்சல் பொதுவாக நன்றாக நித்திரை செய்பவா், ஆனால் இந்த…

கிறிஸ்துவின் அடிச்சுவடில்

மன்னர் குடும்பம் அணியும் விலைமிக்க காலணிகளை அணிந்தால் எப்படி இருக்கும்? கப்பல் பணியாளர் மற்றும் செவிலியரின் மகளான ஏஞ்சலா கெல்லி அதை அறிவாள். மறைந்த மகாராணி எலிசபெத்திற்குக் கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகாரப்பூர்வ ஆடை வடிவமைப்பாளராகவும் கெல்லி இருந்தார். வயதான மகாராணியின் புதிய காலணிகளை பழக்குவிப்பதற்காக, அதை அணிந்து அரண்மனை மைதானத்தைச் சுற்றி நடப்பது அவளது பொறுப்புகளில் ஒன்றாகும். அதற்குக் காரணம் இருந்தது; அவர்கள் ஒரே காலணி அளவை உடையவர்கள், மகாராணி சில நேரங்களில் அரண்மனை விழாக்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இருக்கும், கெல்லிக்கு வயதான மகாராணியின் மீதுள்ள இரக்கத்தால் இந்த அசௌகரியத்திற்கு உதவ முடிந்தது.

எலிசபெத் மகாராணிக்குத் தனிப்பட்ட முறையில் கெல்லி செய்யும் இந்தக் காரியம், கொலோசேயா் (இக்கால துருக்கியின் ஒரு பகுதி) சபைக்கு பவுல் எழுதின, " . . .இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு " (கொலோசெயர் 3:12) என்ற ஊக்கமான வார்த்தைகளைச் சிந்திக்கச் செய்கிறது. நம் வாழ்க்கை "அவர்மேல் கட்டப்பட்ட(தாக)" (2:6) இருக்கையில், நாம் "தேவனால் தெரிந்துகொள்ளப் பட்ட பரிசுத்தரும் பிரியருமாய்" இருப்போம் (3:12). நம்முடைய "பழைய மனுஷனை" களைந்துபோட்டு, "புதிய மனுஷனை"த் தரித்துக்கொள்ள (வ. 9-10) அவர் நமக்கு உதவுகிறார். எனவே தேவன் நம்மை நேசித்து மன்னித்ததால், மற்றவர்களை நேசிப்பவர்கள் மற்றும் மன்னிப்பவர்களாக வாழலாம் (வ.13-14).

தங்கள் அனுதின போராட்டங்களில் இரக்கம் வேண்டி, தங்களைப் புரிந்து தங்கள் "காலணிகளை" நாம் அணியும்படி தேவையிலுள்ளவர்கள் நம்மைச் சுற்றிலும் உண்டு. நாம் அவ்வாறு செய்கையில், நமக்காக எப்போதும் இரக்கத்துடன் இருக்கும் ராஜாவாம் இயேசுவின் கால்சுவடுகளில் நடக்கிறோம்.